Saturday, 16 April 2011

நல்ல உள்ளமும், ஞாபக மறதியும் படைத்த பொதுமக்களே!

உங்களை நாங்கள் வணங்குகிறோம். தெய்வம் வரம் கொடுப்பது போல், எங்களுக்கு நீங்கள் பதவி கொடுப்பதால்...!உங்களை நாங்கள் மதிக்கிறோம். உங்களை வாழவைக்க வந்த எங்களை வாழ வைக்கிறீர்கள் என்பதால்...!நாங்கள் அரசியல்வாதிகள். நாங்கள் அன்று எப்படி இருந்தோம். இன்று எப்படி இருக்கிறோம் என்று ஆராயக் கூடாது. அன்று பட்டுக்கோட்டைக்கும், தஞ்சாவூருக்கும் போய்க்கொண்டிருந்தோம்; இன்று பாரீசுக்கும், நியூயார்க்குக்கும் போய்க்கொண்டிருக்கிறோம்.
இந்த முன்னேற்றத்தை நீங்கள் விஞ்ஞான ரீதியாக கணக்கிட வேண்டுமே தவிர, வேறு காரணங்களை ஆராயக் கூடாது. நாங்கள் சிரிப்பதை உண்மையான சிரிப்பென்றும், நாங்கள் அழுவதை உண்மையான அழுகையென்றும் நீங்கள் நம்புகிறீர்கள்; நன்றி!அந்த நம்பிக்கை மேலும் தொடர வேண்டுமே தவிர, இடையில் தளரக் கூடாது. நாங்கள் மேடையில் பேசும்போது, நீங்கள் ஆரவாரம் செய்கிறீர்கள்; உண்மையில் நீங்கள் ஆரவாரம் செய்வீர்கள் என்று நம்பித் தான் நாங்கள் பேசுகிறோம்; உங்களது புத்திக்கூர்மையில் எங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை.நாங்கள் சில நேரங்களில் உண்மையும் பேசுவதுண்டு! எப்போது உண்மை பேசுகிறோம் என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும். எதிர்க்க முடியாத சூழ்நிலையில், தப்பித் தவறிப் பேசுகிற அந்த உண்மையைப் போலத் தான், நாங்கள் பேசும் எல்லாப் பேச்சும் இருப்பதாக நீங்கள் நம்ப வேண்டும்.
நாங்கள் மேலே போட்டிருக்கும் துண்டின் நீளத்தை விட, எங்கள் நாக்கின் நீளம் அதிகம். அந்த துண்டு வெள்ளை வெளேரென்றிருக்கிறது. அந்தத் துண்டின் வெண்மையைப் போல், எங்கள் உள்ளமும் இருக்க வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்ப்பது நியாயமே.அப்படித் தான் இருக்கிறது என்று நம்பிவிடுவது மிகவும் நல்லதல்லவா! எங்களை நீங்கள் எந்த நேரமும் கைவிட்டு விடக் கூடாது. எங்களுக்கு வேறு தொழில் தெரியாததால் தான், இந்தத் தொழிலுக்கு வந்தோம். நாட்டிலுள்ள வேலையில்லா திண்டாட்டத்தை எங்களால் ஒழிக்க முடிகிறதோ இல்லையோ, எங்களுடைய வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிந்து விட்டது.நமது அரசியல் சட்டத்தின் அடிப்படை மிக பரவலானது. ஓர் அரசியல்வாதிக்கோ, அவன் பதவி வகிப்பதற்கோ இன்னின்ன தகுதிகள் வேண்டுமென்று அது கட்டாயப்படுத்தவில்லை. "அப்படி இருந்தவனா, இப்படி இருக்கிறான்' என்று நீங்கள் ஆச்சரியப்படக் கூடாது. நதிமூலம், ரிஷிமூலம், அரசியல்வாதி மூலம் இந்த மூன்றும், ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை.
பதவிக்கு தகுதி எப்படி நிர்ணயமில்லையோ, அப்படியே பணம் சேர்வதற்கும் தகுதி நிர்ணயமில்லை. ஆகவே, எங்களுக்கு பதவியும் வருகிறது; பணமும் வருகிறது. அந்தப் பணத்தையும் நாங்கள் பொதுமக்களுக்காகவே சேர்க்கிறோமேயல்லாமல், எங்களுக்காக அல்ல.நாங்கள் உங்களையும், நீங்கள் எங்களையும் காப்பாற்றுவதற்காக உருவானதே ஜனநாயகம். ஜனநாயகம் பற்றி யார், எந்த விளக்கம் சொன்னாலும் நம்பாதீர்கள். எங்களை நம்பிய பிறகு, நீங்கள் மற்றவர்களை நம்புவதே மடத்தனம்.ஊழல், ஊழல் என்று மற்றவர்கள் கூறுவர்; நீங்கள் கவலைப் படக் கூடாது.
எந்த நாட்டில், எந்த ஆண்டில் ஊழல் இல்லை. 17ம் நூற்றாண்டில் இல்லையா? 18ம் நூற்றாண்டில் இல்லையா? 19ம் நூற்றாண்டில் இல்லையா? சீசர் காலத்தில் இல்லையா? ஜார்ஜ் மன்னன் காலத்தில் இல்லையா? சர்ச்சில் காலத்தில் இல்லையா?நீங்கள் தலையால் இடும் வேலையை காலால் உதைக்க... மன்னிக்க வேண்டும் - நாக்கு குழறிவிட்டது! நீங்கள் காலால் இடும் வேலையை, தலையால் முடிக்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். ஆகவே, இந்த தேர்தலிலும் நீங்கள் எங்களுக்கு ஓட்டளிக்க வேண்டும்.
மறவாதீர்கள்; எங்கள் நரிக்குட்டி சின்னத்தை மறவாதீர்கள்!நரிக்குட்டி; ஏழைகளின் பணப்பெட்டி!வாழ்க நரிக்குட்டி! வாழ்க நாங்கள்!இப்படிக்கு,ஜனநாயகம் மறவா அரசியல்வாதிகள்.
                                                                                                         -கவியரசு கண்ணதாசன்,
"எண்ணங்கள் ஆயிரம்' என்ற நூலில், "நாங்கள் அரசியல்வாதிகள்' என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.